By சேகர் ராஜதுரை
உன் ஆணவத்தை
விட அழகானது
உன்னிடம் எதுவும்
இல்லை

நீயும் நானும்
சேர்ந்தால்  - அது
இயல் இசை நாடகம்
அல்ல
இதழ் இசை நாடகம்

காற்றும் காதலும்
சன்னல் வழி வருகிறது
கதவுவழி சென்று விடுகிறது

இளமைப் படகே!
உன்னால் கவிழ்ந்த
நதி நான்

முடிந்தால் வந்து
பார்த்து விட்டுப் போ
இறந்து கிடக்கும்
என் அமைதியை

கிளைகளை மூடும்
அவசரத்தில் கனிகளை
இலேசாய் தெரியவிட்ட
அப்பாவி மரம் நீ

முன் அறிவிப்பில்லாத
யுத்தங்களை  - உன்
முந்தானைகள்  செய்கின்றன

நீ உலக அதிசயம்
அல்ல உலக ரகசியம்

நீ பல்கலைக் கழகம்
அல்ல கள்கலைக்கழகம்

காய்சல் அடிக்கிறது
ஒரு டீஷ்பூன் வெட்கம்
தா

உன் நெற்றியில்
முத்தங்களைப் பயிரிட்டேன்
கன்னங்கள் வெட்கத்தை
அறுவடை செய்கின்றன

மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழவகைகள்
உன்னிடம் மட்டுமே உண்டு

எப்படியாவது
இன்று இரவு
கண்டுபிடித்து விட வேண்டும்
வெட்கம் உன் உடம்பில்
ஆரம்பிக்கும் இடத்தை

இலேசான
இதயங்களில் தான்
கனமான காதல்
தோன்றுகிறது

தராசுத் தட்டில் - என்
ஆயிரம் இரவுக்
கண்ணீரை வைத்தேன் - நீ
மறு தட்டில்
ஒரே ஒரு புன்னகையை
வைத்தாய் சமம்

சொர்கத்தை ரசிக்கும்
திருட்டு வழி
உன் படுக்கை அறை
ஜன்னல்

நஞ்சும் காதலும்
தலைக்கு ஏறிவிட்டால்
இறங்காது

ஒரு பெண்ணின்
இடையின் சுற்றளவும்
ஆணின் கைநீளமும்
ஒன்று

ஆள் கொல்லி மிருகங்கள்
காட்டில் திரிகின்றன
உயிர் கொல்லி மிருகங்கள்
தாவணியில் திரிகின்றன

இரட்டை ஜடை
துப்பாக்கியே  - உன்
தோட்டாக்கள் என்ன
மல்லிகை மொட்டுகளா?

உடம்பை மறைக்க
உடை கண்டு
பிடித்தவனை விட
எதை எதை
மறைக்க வேண்டும்
என்று கண்டவனே
ரசனாவாதி  



 




 
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்