By சேகர் ராஜதுரை
நாம் சந்திக்கிற பொழுதுகளில்
உன் கூந்தலை நான்
அடிக்கடி பிடித்துப் பார்ப்பது......
ஒரேயொரு இறகுக்காய்
அலைந்த எனக்கு   - தோகையே
கிடைத்துவிட்ட சந்தோசத்தில்தான்..
By சேகர் ராஜதுரை
உன் அப்பாவுக்கு அறிவேயில்லை..
தென்றல் காற்றுன்னை  
வீட்டிலே வைத்துக்கொண்டு
Electric Fan  வாங்க
எங்கெங்கோ திரிகிறார்....
By சேகர் ராஜதுரை
கண்ணே !
நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.

நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்

அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !

ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.
By சேகர் ராஜதுரை
அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?

இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?

நீ
வித்தியாசமானவ
ள்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவ
ள்
நீ மட்டும்தான்

இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்
By சேகர் ராஜதுரை
அவள் யார்?
யாரவள்?
இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?

விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!

கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!

பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!

போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட
இன்னும் சொல்கிறேன்!
By சேகர் ராஜதுரை
ஒவ்வொரு நாளும்
வார்த்தைகளெல்லாம் வந்து
வரம் கேட்கின்றன.
உன்னைப் பற்றி எழுதும்
கவிதைகளில்
ஒதுக்கி விடாமல்
தம்மை
உபயோகித்துக் கொள்ளுமாறு... 


உனக்காகச்
சீவி சிங்காரித்து
அனுப்பி வைக்கும்போது
வளமில்லாத எந்த வார்த்தையும்
வயதுக்கு வந்து விடுகிறது.
By சேகர் ராஜதுரை
அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !
கடைக்கண் பார்வைக்கும்
கண நேரப் புன்னகைக்கும்
அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !

இரண்டாம் நாளே
ஏலம் போட்டு விட்டாளே !
அவளுடைய வீட்டில்
என் பெயர்
அடிபடவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்...
நானே தெருவில்
அடிபடும்படி
செய்து விட்டாளே !
வீதியில் தடுமாறி
விழுந்த போது கேட்டார்கள்:
‘எது உன்னை இடறியது?’

எப்படி சொல்ல முடியும்...
எதிரே வந்த
ஒரு பெண்ணின்
புன்னகைதான் என்னை
புரட்டி விட்டதென்று !

@ தீக்குச்சிகளைத்
தேடிக் கொண்டிருக்காதீர்கள்
அவளிடம் கேளுங்கள் ....
சிரிப்பிலிருந்து
நெருப்பை உண்டாக்குவது
எப்படி என்று !

@என் கல்லறைக்கு
வரும்போதாவது
அவளைப் பார்த்து
யாராவது கேளுங்கள் .....
அந்தப் புன்னகைக்கு
அர்த்தம் என்னவென்று !
By சேகர் ராஜதுரை
நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.


படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்


கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது


மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று.


அருகில் நீ இருந்த போது
என்னையே கேட்டுக் கொண்டேன்
“நான் யார்?” என்று....
இங்கிருந்து நீ
போய் விட்ட பிறகு
இவர்கள் என்னைக் கேட்டார்கள்
“நீ யார்?” என்று!
By சேகர் ராஜதுரை
புத்தகத்தைக்
கையில் வைத்திருந்த
அவளைப்
பார்த்த பிறகுதான்
புரிந்தது...
நான்
படிக்க வேண்டியது
எவ்வளவோ
பாக்கி இருக்கிறது
என்று.
By சேகர் ராஜதுரை
சுற்றுவதை நிறுத்து
சுற்றுவதை நிறுத்து
என்று
அப்பா சொன்னார்
பையனிடம்

பக்கத்து வீட்டுக்
காரி(கை)யின் பார்வையில்
சாட்டை இருக்கிறது
பம்பரம்
என்ன செய்யும்
பாவம்.
By சேகர் ராஜதுரை
அவளைக்
கண்டவுடன்
என் கையில் கட்டியுள்ள
கடிகாரம் கூட
நின்று விடுகிறது
அதற்கும் சேர்த்துத்தான்
அடித்துக் கொள்கிறதே
இதயத்தினுள் அலாரம்
*************************

கத்தி மாதிரிக்
கண்கள் - என்றேன்
என் இதய்த்தின் மீதுதான்
தீட்டி பார்க்கப் போகிறாய்
என்பதைத்
தெரிந்து கொள்ளாமல்
*************************

எனக்குத் தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல
என் கவிதைகளைத்தான்
என்று
ஆனால்
உனக்குத் தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான்தான்
என்று?
*************************

படிப்பதற்கு
உனக்குப்
பயன்படும் உன்னுடைய
கண்களைத்தான்
உன்னை நான்
படிப்பதற்கும்
பயன்படுத்துகிறேன்
*************************

வேறு யாரோ
ஒருவனுடன்
நிச்சயதாம்பூலம்
நிகழ்த்திக் கொண்டிருக்கிற
உன் பெற்றோர்
உணர்ந்து கொள்ளட்டும்
நான்
தேவதாஸ் அல்ல
பிருதிவிராஜன்
*************************

வீணையைக்
கையிலேந்தி
நின்றிருந்தாய்.....
மெல்ல நெருங்கி
‘மீட்டட்டுமா?..’
என்றேன்
சரியெனத்
தலையசைத்துச்
சம்மதித்தாய்.
உனக்குத் தெரியும்
வீணை வாசிக்க
எனக்குத்
தெரியாது
என்பது.
*************************
By சேகர் ராஜதுரை
  • வெப்பம் :                                                                                   நீரோடு கோலம் காணா நிலைப்படியும்
    நெளிந்தாடு சேலை இல்லாத் துணிக் கொடியும்
    மலர விட்டுத்தரை உதிர்க்கும் பூச்செடியும்
    வாளியும் கிணற்றடியும்
    கைப்பிடிச் சுவரும்
    வரளுகின்றன – என்னைப் போல்
    அவளில்லா
    வெறுமையில்

    ==============================
  • வடு
    அம்மா இழுத்த சூடும்
    அப்பா இறைத்த வசவும்
    இன்னுமிருக்கின்றன –
    என்னில்
    பசுமையாய் –
    நடுமரத்தில் நம் பெயரை
    நீ செதுக்கின வடு மாதிரி
    நீயோ –
    மரம் மாதிரி
    ==============================
By சேகர் ராஜதுரை
என் இனியவளே !
உனக்கு என் நன்றி !
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை
ஒளிச் சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்.

.....................................................

என் பெயரே
எனக்கு மறந்து போன
ஒரு
வனாந்தரத்தில்
என்னைப்
பெயர் சொல்லி அழைத்தது யார்?
நீயா ?
 
.....................................................

என்னை
ஒரு
மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்?
நீ எப்படி அதில்
நிரந்தரப் பாய் முடைந்தாய்?
 
.....................................................


முதலில் –
சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை.
இப்பொழுதோ –
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது.
 
.....................................................
உனக்குத் தெரியுமா?
உன்
அழகுப் பெயரை யாரோ கொஞ்சம்
அழுத்தி உச்சரித்ததால் அழுதிருக்கிறேன்.
 
.....................................................

கண்ணே !
இனி நாம்
தாஜ்மஹாலில்
சந்திக்க வேண்டாம்
ஏனெனில்
இங்கே
ஒரு பணக்கார மன்னன்
ஏழைகளின் காதலை
ஏளனம் செய்திருக்கிறான்.
By சேகர் ராஜதுரை
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;

பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!
By சேகர் ராஜதுரை
சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!

சோலை மல ரொளியோ-உனது

சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-இது பார்.
கன்னத்து முத்த மொன்று!
By சேகர் ராஜதுரை
உலகத்தமிழர்கள் உச்சரிக்கும் ஒரு பெயர் வைரமுத்து

     3000 ஆண்டு இலக்கண இலக்கிய வளம் கொண்ட செம்மொழித் தமிழின் ஈரங்களையும், சாரங்களையும் உள்வாங்கி இன்று உலகப்பார்வையோடு பரந்து விரிந்திருக்கும் படைப்பாளி.

      இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதினைத் தமது இலக்கியத்திற்காகவும், சாகித்ய அகாடமி விருதினைத் தமது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காகவும், இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை 5முறை திரைப்பாடல்களுக்காகவும் பெற்று ஒரு மகாகவியின் அடையாளங்களோடு அறியப்படுபவர்.

வேர்கள்

        இவரது மொழியின் வேர்களைப் போலவே வாழ்க்கையின் வேர்களும் ஆழமானவை. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பழைய மதுரை மாவட்டத்தில் இன்றைய தேனி மாவட்டத்தில் ஒர் எளிய விவசாயக் குடும்பத்தில் 1953 ஜூலை 13இல் கண்விழிக்கிறார் கவிஞர் வைரமுத்து. தந்தையார் ராமசாமித்தேவர், அன்னையார், அங்கம்மாள். அறுபது வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற குக்கிராமம் அவர் பிறந்த ஊர். மண்ணோடு போராடும் மனிதர்களம், ஆடு மாடுகளும், பறவைகளும், ஊரைக்காவல் காத்த பாலைவனத்தாவரங்களும் வைரமுத்துவின் ஐந்து வயது ஆச்சரியங்கள்.

    1957இல் வைகை அணை கட்டி முடிக்கப்படுகிறது. அணையின் நீர்தேங்கும் பரப்புக்குள்ளிருந்த 14கிராமங்கள் அரசாங்கத்தால் காலி செய்யப்படுகின்றன. அப்படி மூழ்கிப்போன தனது தாய்க் கிராமத்தைவிட்டு, அடையாளம் தெரியாத சோகத்தோடு அழுதுகொண்டே தன் தாயின் சுட்டுவிரல் பற்றிக்கொண்டு சுதந்திர இந்தியாவில் அகதியைப்போல வெளியேறி வடுகபட்டி என்ற அடுத்த கிராமத்திற்குக் குடும்பத்தோடு குடி பெயர்ந்தபோது வைரமுத்துவுக்கு வயது 5.

    மண்ணை இழந்த சோகத்தோடு வைரமுத்து வாழ்வின் இரண்டாம் பாகம் வடுகபட்டியில் தொடர்கிறது. கல்வியோடு விவசாயம், விவசாயத்தோடு கல்வி என்று வைரமுத்துவுக்கு அங்கே இரட்டை வாழ்க்கை வாய்க்கிறது.
 

 தமிழை நோக்கி...
    1960களில் தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த திராவிட இயக்கங்களின் பகுத்தறிவும், மொழி உணர்வும் கவிஞர் வைரமுத்துவை உற்சாகப்படுத்தின. தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர்-பாரதி-பாரதிதாசன்-கண்ணதாசன் என்ற ஆளுமைகள் அவரை ஈர்த்தன. வடுகபட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வி பயிலும்போதே கவிதையாலும் சொற்பொழிவாலும் தனித்து அடையாளம் காணப்பட்டார் வைரமுத்து. மொழியின் மீது கொண்ட காதலால் நூலகத்தில் கூடுகட்டும் பறவையாகிப்போனார். மொழியை வகுப்பறைகள் கற்றுத்தந்தன, வாழ்வோடு போராடும் மக்கள் அவருக்கு வாழ்க்கையைக் கற்றுத்தந்தார்கள். வறண்ட வாழ்க்கையால் நேர்ந்த வெற்றிடத்தை இலக்கியக்காற்று வந்து நிரப்பியது. 11வயதில் கவிதை எழுதத் தொடங்கிய வைரமுத்து 14 வயதில் வெண்பா என்னும் கடினமான யாப்பு வடிவத்தில் தேர்ச்சிகொண்டார். பள்ளி நிறைவுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று வெள்ளிக்கோப்பை வென்றெடுத்தார்.
 கல்லூரிக் கல்வி
       கண்நிறையக் கனவுகளையும் நெஞ்சு நிறைய லட்சியங்களையும் சுமந்து கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970இல் சேர்ந்தார். அங்கே வைரமுத்துவின் கல்வி உலகமும் இலக்கிய உலகமும் விரிவடைந்தன. 1972ல் பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தபோது இவரது முதல் கவிதைத் தொகுப்பான வைகறை மேகங்கள் வெளிவந்தது. இவர் மாணவராக இருந்தபோது படைத்த வைகறை மேகங்கள் இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரிக்குத் துணைப்பாடமாக அமைந்தது.

    மரபு, நவீனம் இரண்டையும் குழைத்து வைரமுத்து தனக்கென்று தனியானதொரு கவிதை மொழியைத் தயாரித்துக் கொண்டார். உள்ளடக்கம், உருவம்-நவீன வெளிப்பாட்டுமுறை ஆகிய அனைத்திலும் தமிழ் இலக்கிய உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

    சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். முதல் வகுப்பில் கல்லூரியின் முதல் மாணவராகத் தேறினார். வைரமுத்துவின்புதுக்கவிதைத் தொகுப்பான திருத்தி எழுதிய தீர்ப்புகள்1979இல் வெளிவந்தது. அது தமிழ் இலக்கியப்பரப்பில் கணிசமான அலைகளை ஏற்படுத்தியது.
திரையுலகில்...
    1980இல் பாரதிராஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் வைரமுத்துவின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. இவரது வருகைக்குப் பிறகு திரைப்பாட்டு, புதிய சிகரங்களைத் தொட்டது. மொழிநடையின் கட்டுமானங்களை உடைத்து, முன்னெப்போவதுமிராத படிம வீச்சுக்களோடு திரைப்பாட்டுக்குக் கவிதையின் ஆபரணங்களை அணிவித்து பிற மொழிகளின் செவிகைளையும் தமிழை நோக்கித் திரும்பச் செய்தார் வைரமுத்து. இதுவரை 6500 பாடல்கள் புனைந்திருக்கிறார்.
ஒவ்வோரு பத்தாவது நிமிடத்திலும் இவரது பாடல் ஒன்று உலக வானொலிகளில் ஒலிபரப்பாகின்றது. அல்லது உலகத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றது. சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை 4முறை பெற்ற பாடலாசிரியர் இவர்தான்.

   ஐந்து திரைப்படங்களுக்குக் கதை வசனமும் தீட்டியிருக்கிறார். அவற்றில் எதார்த்தத்தின் வழியே அழகியலின் எல்லைகளை எட்டியிருக்கிறார், மனிதப் பாத்திரங்களின் ஆழ்மன ஆழங்களைத் தொட்டிருக்கிறார்.
 

தேசிய விருதுகள்
      குடியரசுத் தலைவர்களிடமிருந்து சிறந்த பாலாசிரியருக்கான தேசிய விருதை 5முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இந்தியாவில் இவர் மட்டும்தான். இவர் படைத்த கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக 2003ல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். இவரது இலக்கியப் பணிக்காக 2003ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
படைப்புலகம்
     வைரமுத்துவின் படைப்புலகம் ஆழ்ந்து விரிந்தது. தமிழ் இலக்கியப் பயிற்சியும், உலக இலக்கிய ஈடுபாடும், வாழ்வியல் குறித்த கூரிய பார்வையும், நேரிய சிந்தனையும், இருத்தல் பற்றிய பிரக்ஞையும், அழகியல் ஊறிய எதார்த்த மொழியும் கவிஞர் வைரமுத்துவின் படைப்புலக பலங்கள். கவிதை, நாவல், திரைப்பாட்டு, கட்டுரை, பயண இலக்கியம், திரைவசனம், மொழிபெயர்ப்பு என்ற பல்வேறு இலக்கிய வடிவங்களில் 35படைப்புகளை வைரமுத்து படைத்திருக்கிறார். மொழியை நவீனப்படுத்தியதிலும், ஓர் இலக்கியத் தலைமுறையை உருவாக்கியதிலும், ஊடகங்களின் மொழிநடையைக் கணிசமாக மாற்றியதிலும் இவர்தம் படைப்புகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

      இவர் படைப்புகளை ஆராய்ச்சி செய்து பத்துப் பேராசிரியர்கள் டாக்டர் பட்டமும் முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் எம்ஃபில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களிலும் கடல் கடந்தும் இவரது படைப்புகள் பாடங்களாகத் திகழ்கின்றன.

மொழிபெயர்ப்புகள்
        இவர் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், ரஷ்யன், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "A DROP IN SEARCH OF THE OCEAN" என்ற பெயரில் இவர்தம் தேர்ந்த கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது."பிந்து சிந்து கி ஓர்" என்ற தலைப்பில் இவர் கவிதைகள் இந்தியில் பெருந்தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சாகித்திய அகாடமியின் தலைவரால் வெளியிடப்பட்டது.
இலக்கிய விருதுகள் வைரமுத்துவின் படைப்பாளுமையைப் பாராட்டி, முதல்வர் கலைஞரின் முரசொலி அறக்கட்டளை ஒரு லட்ச ரூபாய் விருது வழங்கியது. இவரது தண்ணீர் தேசம் படைப்புக்காகத் தினத்தந்தி, ஆதித்தனார் விருதாக ரூபாய் 50,000 வழங்கியது.

        ஒரு தனியார் அமைப்பு கனடா அரசாங்கத்தோடு இணைந்து கவிஞர் வைரமுத்துவின் தபால்தலையை டொரண்டோவில் வெளியிட்டு கௌரவித்தது.

   வைரமுத்து தம் ஒவ்வொரு பிறந்தநாளிலும் மூத்த கவிஞர்களுக்கும், இளங்கவிஞர்களுக்கும் கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிப் பணமுடிப்பும் பட்டயமும் தந்து பாராட்டி வருகிறார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் விருது பெற்றிருக்கிறார்கள்.

டாக்டர் பட்டங்கள்
      இவரது இலக்கியப் பணிகளுக்காக, தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
சான்றோர் கூற்று
      80 மில்லியன் தமிழர்கள் அன்றாடம் உச்சரிக்கும் இந்தக் கவிஞரை அன்றைய குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் காப்பியக்கவிஞர் என்று போற்றினார். இந்தியாவின் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் கவி சாம்ராட் என்று பட்டம் சூட்டி அழைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தலைசிறந்ததமிழ்ப்படைப்பாளியுமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி இவருக்குக் கவிப்பேரரசு என்ற பட்டம் சூட்டி மகிழ்ந்தார்.

     லண்டனில் வைரமுத்துவுக்கு நிகழ்ந்த பாராட்டு விழாவில் இங்கிலாந்து நாட்டின் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ், உணர்ச்சியும் அறிவும் சரியாக இணைந்த கலவைகள் வைரமுத்து கவிதைகள் என்று பாராட்டினார். லண்டன் மாநகராட்சியின் ஆட்சி மன்றத்தலைவர் ராபின் வேல்ஸ், ராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காட்லாந்துக் கவிஞரோடு கவிஞர் வைரமுத்துவை ஒப்பிட்டார்.

      "இன்றைக்குத் தமிழை ஆண்டு கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்" என்று முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி இவரைப் பாராட்டியிருக்கிறார்.

      இந்தியாவின் சிறந்த ஐம்பது இளைஞர்களுள் ஒருவர் என்று இந்தியா டுடே பத்திரிகை இவரைத்தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தது. அமெரிக்கன் லைப்ரரி ஆப்காங்கிரஸ் இவரது கவிதைகளை இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து உலக இலக்கிய ஆவணங்களுள் ஒன்றாகப் பாதுகாத்து வருகிறது.

கண்டங்கள் கண்டவர்
      அமெரிக்கா, கனடா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாங்காக், ஸ்ரீலங்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபுநாடுகள், குவைத், ஓமன், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இலக்கியப் பயணம் மேற்கொண்டிருக்கின்றார்.
 குடும்பம்
      பேராசிரியரும் படைப்பாளியுமான டாக்டர் பொன்மணி வைரமுத்து இவர் மனைவி, ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மூத்த மகன் மதன்கார்க்கி, தகவல் தொழில்நுட்பப்பட்டம் பெற்ற இளையமகன் கபிலன் வைரமுத்து என மைந்தர் இருவர், குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார்.
விரியும் சிறகுகள்
     உலக மானுடம் பருகும் தாய்ப்பாலாக இலக்கியம் இருக்க வேண்டும் என்பது அவரது படைப்புக் கொள்கை.
    பிரபஞ்சம் குறித்த வியத்தலும், இருத்தல் குறித்த பெருமையும், உலக சமாதானமும் போரற்ற சமுதாயமும் வைரமுத்துவின் இலக்கிய உள்ளீடுகள்

   மனிதகுல மேம்பாடு என்ற இலட்சியத்தோடு இயங்கும் இலக்கியப் பயணத்தில் வைரமுத்துவின் வழிகளும், வெளிகளும் விரிந்து கொண்டே போகின்றன.

தேசிய விருதுகள்
1986 முதல் மரியாதை பாரதிராஜா
1993 ரோஜா மணிரத்னம்
1995 கருத்தம்மா பாரதிராஜா
1995 பவித்ரா கே. சுபாஷ்
2000 சங்கமம் சுரேஷ் கிருஷ்ணா
2003 கன்னத்தில் முத்தமிட்டால் மணிரத்னம்

படைப்புகள்
01. வைகறை மேகங்கள் (1972)
02. திருத்தி எழுதிய தீர்ப்புகள் (1979)
03. இன்னொரு தேசிய கீதம் (1982)
04. கவிராஜன் கதை (1982)
05. இதுவரை நான் (1983)
06. என் பழைய பனை ஓலைகள் (1983)
07. என் ஜன்னலின் வழியே (1984)
08. மௌனத்தின் சப்தங்கள் (1984)
09. வானம் தொட்டு விடும் தூரம்தான் (1983)
10. கல்வெட்டுக்கள் (1984)
11. கொடிமரத்தின் வேர்கள் (1984)
12. கேள்விகளால் ஒரு வேள்வி (1984)
13. ரத்த தானம் (1985)
14. சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் (1985)
15. நேற்றுப்போட்ட கோலம் (1985)
16. மீண்டும் என் தொட்டிலுக்கு (1986)
17. எல்லா நதியிலும் என் ஓடம் (1989)
18. வடுகட்டி முதல் வால்கா வரை (1989)
19. இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல (1991)
20. காவி நிறத்தில் ஒரு காதல் (1991)
21. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் (1991)
22. ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் (1991)
23. சிகரங்களை நோக்கி (1992)
24. இதனால் சகலமானவர்களுக்கும் (1992)
25. வைரமுத்து திரைப்பாடல்கள் (தொகுதி 1)1993
26. வைரமுத்து திரைப்பாடல்கள் (தொகுதி 2) 1993
27. வில்லோடு வா நிலவே (1994)
28. தண்ணீர் தேசம் (1996)
29. தமிழுக்கு நிறமுண்டு (1997)
30. பெய்யெனப் பெய்யும் மழை (1999)
31. வைரமுத்து கவிதைகள் (2000)
32. கள்ளிக்காட்டு இதிகாசம் (2001)
33. கொஞ்சம் தேநீர் நிறைய வானம் (2005)
34. ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் (2005)
35. கருவாச்சி காவியம் (2006)
36. A DROP IN SEARCH OF THE OCEAN
37. BINDHU SINDHU KI OOR (HINDI)
By சேகர் ராஜதுரை

உனக்குத் தெரியுமா?..
உன்
கையைப் பிடிப்பதற்குக்
காரணம் வேண்டும்
என்பதற்காகவே.... நான்
கஸ்டப்பட்டு
கைரேகை யோசியம் படித்தேன்

By சேகர் ராஜதுரை

உன்
பாடசாலை முடிந்துவிட்ட
சில பகற்பொழுதுகளில்
யாருக்கும் தெரியாமல்
உன் வகுப்பறை சென்று
இரண்டொரு மணிநேரம் ....
உன் இருப்பிடத்தில்
இருந்துவிட்டு வந்ததை
இப்போது நினைத்தாலும்
இனிக்கிறது............

By சேகர் ராஜதுரை

என்னவளின்
எச்சில் துளிகள்தான்
வானிலே மின்னுகின்ற
நட்சத்திரங்கள்........

என்னவள்

வெட்டியெறிந்த ....... அவளின்
கட்டை விரல் நகம்தான்
வானிலே
வட்ட நிலவாய்
வளர்ந்து நிற்கிறது

By சேகர் ராஜதுரை

 

 

உனக்குத் தெரியுமா?...
உன் குரலைக்
கேட்கவேண்டும் என்பதற்காக
ஊரே உறங்கத் தொடங்கும்
எத்தனை இரவுகளில்
உன் வீடுவரை
வந்து சென்றிருக்கிறேன்... என்று..

By சேகர் ராஜதுரை

 

 

 

 

 

உன்னைப் பார்த்தபோதே
முடிவு செய்துவிட்டேன்
நான் மடிந்தால்............அது
உன் மடியில்தான்

By சேகர் ராஜதுரை

"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.

புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.

துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.

பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.

அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.
By சேகர் ராஜதுரை

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

....................................................................................................................................................

2. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

....................................................................................................................................................

3. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

....................................................................................................................................................

4. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

....................................................................................................................................................

5. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

....................................................................................................................................................







By சேகர் ராஜதுரை
இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி.
இயற்கையானது.

ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும்
அறியாதது.

ஒரு தவறும் இதில் இல்லை.
வாழ்க்கை இருப்பதும் வளர்வதும்
காமம் என்ற அடிப்படைச் சக்தியினால்.
 

நாம் காமத்தால் பிறந்தவர்கள்.
நம் ஒவ்வொரு அணுக்களிலும்
காமம் சக்தியாக உள்ளது.

இதை அறிந்தே ஓவ்வொரு சமூகமும்
சமயமும் இதைக் கட்டுப்படுத்தி
வைத்துள்ளன. 


தமது பிழைப்புக்காக.
இதற்கு எதிரான கருத்துக்களை நமக்குள்
விதைத்து, அடக்கப்பண்ணி குற்ற உணர்வை
வளர்த்து நம்மை நோயாளியாக்கி பின்
நோய்க்குச் சேவை என்ற பெயரில் பரிகாரமும்
செய்கின்றன.

 
காமம்! நமக்குள் இயங்கும் இயற்கையின் மிகப் பெரிய சக்தி.
நம்மால் கட்டுப்படுத்த முடியாதது. நம் கட்டுப்பாடுகளையும் மீறி வெளிவருகின்றது. அடிபணிகின்றோம். அடுத்த கணம் குற்ற உணர்வால் வருந்துகின்றோம்,  ஏன்?
காம சக்தியின் ஆற்றலை புரிந்து கொள்ளத்தவறியதால்
அச் சக்தியின் பலம் கண்டு பயந்து இதை வழிநடாத்த முடியாமல்
இதற்கு எதிரான கருத்துக்களையும் அடக்குவதற்கான வழிகளையும்
சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், நம்முள் விதைத்துள்ளனர்.
 

இது எப்பொழுதும் காம சக்திக்கு எதிராக நம்மை சிந்திக்க செயற்படவைக்கின்றது. காரணம் நம் உள்மனதில் (subconsciousness) இவை ஆழமாக வேருண்டியுள்ளன. காமத்தைக் கண்டிப்பது தன்னைக் கண்டிப்பதற்கு சமம் என்கிறார் ஓசோ.
 
காம சக்தியை ஒழுங்கு முறையில் வழிநடத்தினால் சிறந்த பலன்களையும்
புதிய ஆற்றல்களையும் நமக்குள் வளர்த்திருக்கலாம்.
இதற்கான வழிகளை முன்னோர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர்.
 

ஓசோ!
இந்த வழிகளையும் வழிகளை கண்டுபிடித்த வழிகாட்டிகளையும்
புதை குழிகளிலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்பித்து தூசிதட்டி
மீண்டும் நமக்கு வழங்கியுள்ளார். வழிகாட்டியுள்ளார்.

காமமின்றி நாமில்லை.
 

ஆனால் ஒரு உயிரை உருவாக்க மட்டுமே
நாம் பயன்படுத்துகின்றோம்.
இது மட்டப்படுத்தப்பட்ட பயன்பாடு மட்டுமே.
காம சக்திக்கு எதிரான ஆதிக்கம் இருந்த காலங்களில்
தம் சந்ததிகளை உருவாக்க மட்டுமே காமத்தைப் பயன்படுத்தினர்.
இதுவே மனிதருக்கு பழக்கமான வழக்கமான பணியாகிவிட்டது.
புதிய உயிர் உருவாவது காம சக்தியின் ஒரு பயன்பாடு மட்டுமே.
இதைவிட மனிதரின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கே பயன்படக்கூடியது
இக் காம சக்தி.
 

இதைப்பற்றி சிந்திக்க நேரம் ஏது?
காம கலவையை நம் சக்தியை இழப்பதற்கும் ஆறுதல் அடைவதற்கும்
உச்ச இன்பம் என்ன என்பதை அறியாமல் இயந்திரதனமாகப் பயன்படுத்துகின்றோம். உச்ச இன்பம் என்பது நாம் சக்தி மயமாக மாறுவது.
நமது தலையிலிருந்து கால் விரல் வரை அனைத்து இயங்கும் சக்தி நிலை.
சக்தி அலை வடிவங்களாக…உடலை உணராநிலை.
ஏன் நம்மால் உணர முடியவில்லை.
 

பிரக்ஞையற்றநிலை.
அவசரம். குற்ற உணர்வு.
எவ்வளவு விரைவாக முடிக்கலாமோ
அவ்வளவு விரைவாக முடிக்க நினைப்பது.
முடிந்தவுடன் விடுதலை பெற்ற உணர்வு.
 

ஆனால் இது தற்காலிக விடுதலை என்பதை மறந்துவிடுவது.
ஏனனில் மீண்டும் காமம் நம்மை இழுக்கும்.
பழையபடி…இவ்வாறு
ஒரு வட்டத்தில் இயங்குவதே நம் வாழ்வு.

காம செயற்பாட்டில் உடனடியாக
ஆணால் பங்குபற்ற முடியும்
என்பதால் ஆணுக்கு அவசரம்.
பெண்ணுக்கு நீண்ட நேரம் தேவை.
இதனால் நீண்ட காலமாக
பெண்கள் காமத்தின் இன்பத்தை அனுபவித்ததில்லை.
உச்ச இன்பம் (orgasm) ஆண்களுக்கு மட்டுமல்ல
பெண்களுக்கும் வரும் என்பது இயற்கைக்குப் பழசு.
மனித மன உலகுக்குப் புதுசு.
 

ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது.
உடன் எழுந்து உடன் இறங்கும். மீண்டும் உடன் எழாது.
பெண்ணினது செங்குத்தானதல்ல.
நீண்டதும் படிப்படியாக உயர்ந்தும் செல்லும்
அலை வடிவம் கொண்டது மட்டுமல்ல
குறைந்தது ஒரே நேரத்தில் மூன்று தரத்திற்கு மேல் உயரக்கூடியது.
ஆகவே ஆணால் திருப்பதி செய்யமுடியாது.

காமத்தில் நாம் இன்பம் அனுபவிக்கும் கணம்
மூன்று முக்கிய விடயங்கள் நடைபெறுகின்றன.
நேரம், தன்முனைப்பு, இயற்கையாக இருப்பது.
நேரம் தெரியாது, மறந்து விடுவோம்.
தன்முனைப்பு இல்லாது இருக்கும்.
 

நான் என்பது இல்லா நிலை. இயற்கையாக இருப்போம்.
இயற்கையுடன் கலந்து பிரபஞ்சமாகவே மாறியிருப்போம்.
இந்த நிலையே தன்மையே உச்ச இன்பத்தை தருகின்றது.
இதைக் காம கலவையில் சிறிது நேரம் மட்டும் பெறுவதால்
நாம் சிற்றின்பம் எனக் கூறி குறைந்த மதிப்பை வழங்கிவிட்டோம்.
இந்த உச்ச இன்பத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிப்போரே
பேரின்பம் பெற்ற ஞானிகள் என ஆன்மீகத்தில் கூறுகின்றோம்.

இதை அறிந்து கொள்வதற்கு தடையாக இருப்பது
நமது பிரங்க்ஞையற்ற தன்மை.
 

அவசரமின்றி, ஆறுதலாகவும் குற்றவுணர்வின்றி, ஆனந்தமாகவும்
ஓவ்வொரு கணத்தை முழுமையாகவும் பிரங்க்ஞையுடனும்
காம கலவையில்; பங்குபற்றும் பொழுது
உச்ச இன்பம் என்ன என்பதை அறியலாம்.
சக்தி வெளியேற்றம் இல்லாது தொடர்ந்தும் அனுபவிக்கலாம்.

இது இன்பம் அனுபவிக்க மட்டுமல்ல
ஆனந்தமான வாழ்வுக்கு மட்டுமல்ல
மானுட விடுதலைக்கும் வழி காட்டும்.
இதுவே ஓசோ நமக்கு கற்பிக்கும் பாடம்.
 

இது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிவது.
ஓரே ஒர வழி தான் உண்டு. காம கலவையில்; ஈடுபடும் பொழுது பிரங்க்ஞையுடனும் முழுமையாகவும் செயற்படுவது மட்டுமே இதற்கு விடைதரும்.
ஏனனில் உண்மையான அறிவு
நமது அனுபவத்திலையே கிடைக்கின்றது.
காம கலவையில் உருவாகும் சிறிதுநேர பேரின்பத்தி லிருந்தே தியானம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஒசோ.

 
காம சக்தி இருபத்தியொரு வயது வரை
அதன் உச்ச நிலைக்கு இயற்கையாக உயர்ந்து சென்று
பின் கீழ் இறங்கி நாற்பத்தியிரண்டு வயதில்
இயற்கையாக காமம்; நம்மைவிட்டு அகன்றுவிட வேண்டும்.
இது ஓவ்வொரு வயதுக் காலகட்டத்தையும்
முழுமையாக அனுபவித்திருந்தால்
இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு.
ஆனால் என்ன நடைபெறுகின்றது.
நாற்பது வயதில் நம்மை விட்டுச் செல்ல வேண்டிய காமம்
இறக்கப்போகும் என்பது வயதிலும்
நம் மனதை விட்டுச்செல்வதில்லை.
ஏன்?
 

அந்தந்த காலகட்டங்களில் அவற்றை அனுபவிக்காமல்
அச் சக்திகளை அடக்கி பிற விடயங்களுக்கு
கவனம் திசை திருப்பப்டுகின்றது.
இதற்கு தமது காம சக்தியை
வெளிக் காட்டுவதில் இருக்கும் பயமே காரணம்.
பொதுவாக ஆண்கள் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை
காமத்தை பற்றி சிந்திக்கின்றனர்.
 

பெண்கள் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை
காமத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர்.
ஆகவே காமத்தை சரியான பாதையில் வழிநடத்துவதே
மனிதர்கள் மனச் சோர்வின்றி மன அழுத்தமின்றி
ஆனந்தமாக வாழ்வதற்கு சிறந்த வழி.

 
பிரம்மச்சாரியம் என்பது காம சக்தியை அடக்குவதல்ல.
இதை அடக்குவதால் மேலும் காமம் அதிகரித்து காமுகர்களாக உருவாகவே முடியும். இக் காம சக்தி மாற்றப்படக் கூடியது.
இவ்வாறு மாற்றுவதன் மூலம் காமம் நம்மிலிருந்து
மரங்களிலிருந்து பழுத்த பழங்கள் விழுவது போல்
காய்ந்த இலைகள் தானாக விழுவது போல் அகன்றுவிடும்.
இதன்போது காம சக்தி காதலாக பரிணாமமடைகின்றது.

சிற்றின்பம் என்ற காமத்திலிருந்து (sex)
காதல் (love) என்ற என்ற படிகளில் ஏறி
பேரின்பம் என்ற அன்புத்தன்மையை (compassion) அடையலாம்.
புடிகளில் ஏறுவோமா?

==============================
By சேகர் ராஜதுரை

 

 

 

அவளுக்கு....
நீலம் பிடிக்கும்
அதனால்தான்...... என்
சாப்பாட்டுக் கோப்பை முதல்
சவர்க்கார டப்பா வரை
நீல நிறத்தில்

By சேகர் ராஜதுரை

 

 

 

 சிலருக்கு....
அழகாய்ச் சிரிக்கத்தெரியும்
ஆனால்....
அவளுக்கு மட்டும்தான்
அழகாய்...
முறைக்கக்கூடத் தெரியும்....



By சேகர் ராஜதுரை

அவளுக்கு..... என்னிடம்
என்னென்ன பிடிக்காதோ
அவற்றையெல்லம்
என்னிடம் இருந்து
இல்லாமல் செய்துவிட்டேன்
இப்போது அவளுக்கு.....
என்னைப் பிடிக்கவில்லை
என்னை நான் என்ன செய்வேன்?

By சேகர் ராஜதுரை

இதுவரைக்கும் - நான்
எழுதிப் படித்த கவிதைகளுள்
எனக்குப் பிடித்த கவிதை
அவளின் பெயர்.....
அவளுக்குப் பெயர் வைத்தவன்
என்னை விட(ப்)
பெரிய கவிஞனா?
************

எனக்கு அவளைப் பிடிக்கும்

ஆனால்.....
என் பேனைக்கு
அவளின் பெயரைத்தான் பிடிக்கும்
************

கவிதை......

எழுதுவதை விட
அவளின்....
பெயரை எழுதுவதுதான்
எனக்கும் பிடிக்கும்
என் பேனைக்கும் பிடிக்கும்
************

அவளின்

பெயர் எழுதிவைத்த காகிதம்
மணக்கிறது.....
அகராதியில் அர்த்தம் தேடினேன்
அவளின் பெயருக்கு
அங்கே.......
"துளசி" என்றிருந்தது

By சேகர் ராஜதுரை

 

 

 

என்னவளே..... உன்
நினைவுப்பால் குடிக்கும்..... என்
மனமென்னும் குழந்தைக்கு
எழுந்து நடைபோட.....
உன் மன்மென்னும்
நடைவண்டி வேணுமடி
தருவாயா?

By சேகர் ராஜதுரை

உன்மீதான காதலில்......
எத்தனை அடிபட்டும்
வலி தந்த - உன்
வார்த்தையைத்தான்
தேடுதெந்தன்
பிடிவாதம் பிடித்த மனம்.

By சேகர் ராஜதுரை

முக்கனிகள் எவையென்று
தெரியுமா உனக்கு?
சின்னப்பிள்ளை உனக்கு
ஒன்றுமே தெரியாது...
சொல்கிறேன் கேள்
மூன்றாவது வாழை
....
இரண்டவது மா....
முதலாவது
உன் உதடு......

By சேகர் ராஜதுரை
 
 
 
 
 
உன்னைப் பார்க்கத்தான்
கண்கள் வாங்கிவந்தேன் - உன்
கண்ணின் பார்வைக்கே
என்னை நான் விற்று விட்டேன்....
By சேகர் ராஜதுரை
நீயும் மற்றவர்களும்
என்னைப் பார்க்காமல் இருந்தால்
நான்
உன்னைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்....
By சேகர் ராஜதுரை

 

 

 

எதைப் பார்த்தாலும்
உன்னையே நினைக்கிறேன்
உன்னைப் பார்த்தால் மட்டும்
என்னையே மறக்கிறேன்

By சேகர் ராஜதுரை

 

 

உன்னை
எவ்வளவு காதலித்தாலும்
காதல்...... எனக்கு
விளங்கவேயில்லை
இந்தக் காதலில்...
அதிக சந்தோசமும்
சாகச் சொல்கிறது......

By சேகர் ராஜதுரை

 

 

உனக்குத் தெரியுமா?
உன்னுடைய வார்த்தைகளுக்கு
மற்றவர்கள்......
செவி கொடுப்பார்கள்
நான் மட்டும்தான்........
உயிரைக் கொடுப்பேன்.

By சேகர் ராஜதுரை

வெயில் தோய்ந்த பகல்
வேலையில்லாத நாம்
ஒற்றைப் போர்வை
குட்டித் தூக்கம்
இதுபோதும் எனக்கு...

மஞ்சள் மாலை

மாமர ஊஞ்சல் - என்
மடியில் நீ.......
மயக்கத்தில் நாம்
இதுபோதும் எனக்கு....

இளைப்பாறும் நான்

ஆறாத தேனீ ர்
ஒற்றைக் கோப்பை
ரெட்டைத் தாகம்
பருகும் நான் - அதை
பறிக்கும் நீ
இதுபோதும் எனக்கு...

கருமையான் இரவு

அழகான நிலவு
எண்ண நட்சத்திரம்
என்னோடு நீ
இதுபோதும் எனக்கு....

By சேகர் ராஜதுரை

பால் பொழியும் நிலா
பரந்த நிலம் - அதில்
படம் வரையும் நீ
பக்கத்தில் நான்
இதுபோதும் எனக்கு....

விடுமுறை நாள்

விடாத மழை
ஓடிவரும் மழை நீர்
ஓடம் விடும் நாம்
இதுபோதும் எனக்கு....

தொலைவில் நான்

தொலைபேசியில் நீ
கொஞ்சச் சொல்லி
கெஞ்சும் நான்.....
"இல்லை" என்று
மிஞ்சும் நீ
இதுபோதும் எனக்கு.....

By சேகர் ராஜதுரை

பெண்ணே!
இந்தக் கடிதத்தை கொண்டு வருபவன்
உனக்காகப் படைக்கப்பட்டவன்
 

இவன்மீது இவனுக்கே உரிமையில்லை
என்னும் அளவிற்கு,
இவன்மீது உரிமை உனக்கு உண்டு.
 

உன் வார்த்தைகள் தேவையில்லை
உன் பார்வைக்கே இவன் அடிமை
இவனை ஏற்றுக்கொள்
இல்லை எப்படியாவது கொல்
 

தன்மீதான உரிமையை இவன் இழந்த்தால்
தற்கொலை செய்துகொள்ளவும்
இவன் தயங்குகிறா
ன்
 

உன் காதல் சிலுவையை சுமக்கும் இவனால்
இவனுக்கு மட்டுமல்ல
மற்றவர்களுக்கும் துன்பம்
 

இவன் உனக்கே உரித்துடையவன் - ஆகையால்
இவன்மீது எனக்கும் உரிமையில்லை - ஆதலால்
இவன் விசயத்தில் தலையிடல் தர்மமில்லை
என்று தெரிந்திருந்தும்
இவன் படும் துயரம் கண்டு
இவன் சார்பில் நான் எழுதும்
இரங்கல் கலந்த சிபார்சுக் கடிதமிது
 

இதுவரை, இவனுடையதென்று
எதையும் நீ ஏற்கவில்லை - ஆதலால் இவன்
தன்னையே ஏற்க மறுக்கிறான்
எனவே பெண்ணே!
உன்னை மட்டும் நேசிக்கும் இவனை
நீ நேசிப்பாயாக....... 

                              இப்படிக்கு இறைவன்..... 
By சேகர் ராஜதுரை

எனக்காக
உன் நினைவுகளை
தத்துக்கொடுத்த உனக்காக
நான் செத்துப்போகட்டுமா?

சாகலாம்......

என்றுதான் நினைக்கிறேன்
இப்போது நான்
உயிரோடு இல்லை
என்பது தெரியாமல்

By சேகர் ராஜதுரை

 

 

நீ..........
காதலிக்காதது போல் நடிப்பதற்கு
என்.....
காதல் மேடைதானா கிடைத்தது?
உன்.....
கோபமான பார்வைகள்தான்
நீ........
நடித்ததில் பிடித்தது.

By சேகர் ராஜதுரை

 

காயமில்லாமல் வலிக்குமென்று
உன்னை....
காதலித்த பின்தான்
கண்டுகொண்டேன்

வலிகள் கூட இனிக்குமென்றும்

உன்னை....
காதலித்த பின்தான்
கண்டுகொண்டேன்

By சேகர் ராஜதுரை
* சர்வேஸ்வரனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால், மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.
.................................................................................................................................................

* கடவுள் தாம் நேசிக்கிறவனைத் தண்டிக்கிறார். தம் மகனாக ஏற்றுக்கொள்ளும் எவனையும் பிரம்பால் அடிக்கிறார்.
.................................................................................................................................................


* ஒவ்வொரு மனிதனும் தன் மோகங்களால் இழுக்கப்பட்டு மருளும்போதே சோதனைகளுக்கு ஆளாகிறான்.
.................................................................................................................................................


* சோம்பேறியே! எறும்பைக் கவனி. அதன் வழிமுறைகளைப் பின்பற்றி அறிவு பெறு. அதற்கு வழிகாட்டி இல்லை. தலைவனும் இல்லை. அதிகாரியும் இல்லை. கோடைகால ஆகாரத்திற்கு அறுவடை காலத்திலே தானியத்தைச் சேகரித்து வைக்கிறது.
.................................................................................................................................................

* ஆசைச் சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான். ஏனெனில் சோதனை முடிந்த பின் வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான்.
.................................................................................................................................................


* எவனாவது முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் கடைசியானவனாய், எவருக்கும் தொண்டனாய் இருப்பானாக.
By சேகர் ராஜதுரை
1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்