By சேகர் ராஜதுரை
அமைதியான இரவு,
அழகான நிலவு,
அடிக்கடி ஆனந்த அரட்டை,
அவ்வப்போது அழுகையும் கண்ணீரும்,  
சிலவேளை பரஸ்பர முத்தம்,
பலவேளை முனகல் சத்தம்,
மெய்சிலிர்க்கும் தொடுகைகள்,
புல்லரிக்கும் பார்வைகள்,
முந்தநாள் திருமணம்,
நேற்று, கனவில் கனவு
அதிலும் நீ
அது மட்டுமல்ல
என்னுடைய எல்லாக்கனவிலும்
நீ மட்டும்
உனக்குத் துணையாக
நான் மட்டும்
நமக்குத் துணையாக
காதல் மட்டும்.......
By சேகர் ராஜதுரை
உனக்குத் தெரியுமா
கனவென்றால் என்னவென்று.....?
உன்னைக் காதலித்த பிறகுதான்
எனக்குத் தெரியும்

உன்மீது கொண்ட காதலுக்காக

என் உயிரைத்தவிர
எல்லாவற்றையும் இழந்திருக்கிறேன்
லாபமென்று அடைந்தது
உன் கனவுகளையும்    
நினைவுகளையும்
மட்டும்தான் 
 நீ ''இல்லை'' என்று சொன்னபோதே
என்னுயிரை இல்லாமல் செய்திருப்பேன்
உன் நினைவுகள் தரும் சுகத்தை
உன்னாலும் தரமுடியாது
அதனால்தான் இன்னமும் இருக்கிறேன்

உன்னைப்பற்றிய என் கனவுகள்
ஒரேமாதிரியானவையாக இருந்தாலும்
அவை என் இனிமைக்கு
உரமிடுபவையாகத்தான் இருக்கின்றன

பழகப் பழகப் பாலும் தேனும்
புளித்துப் போகலாம்
பல யுகங்கள்
நான் பழகத் துடிக்கும் நீயும்
என் மனச்சுவற்றில் பதிந்து  விட்ட 
உன் முகமும்  வரும் 
கனவுகள் புளிக்காது
.... 
By சேகர் ராஜதுரை

 

 

 

கவிதை எழுதுவதில்
உனக்கும் எனக்கும் போட்டி...
நான்தான் வென்றேன்
அதிக தடவை உன் பெயரை எழுதி......

By சேகர் ராஜதுரை

யாருடனும்
அளவாய்ப் பேசும் நீ
என்னிடம் வந்தன்று
அழகாய் இருக்கென்றாய் - என்
கையெழுத்தைத்தான் கண்டு....

யாருடனும்

அதிகம் பேசும் நான்
அன்று அவதிப்பட்டேன்
உன்னிடம் ஒரு வார்த்தை பேச...
அப்போதுதான் விழுந்தது
என்மனதில் காதலுக்கான விதை...

By சேகர் ராஜதுரை

 

 

 

உன் வீட்டுக் கம்பிக்கொடியில்
காய்கிற உன் ஆடைகள்.....
என் மனவெளியை மேய்கிற
குட்டி ஆடுகள்.....

By சேகர் ராஜதுரை

ஒரு பேருந்துப்பயணம்.......
முன் இருக்கையில் நீ...
பின் இருக்கையில் நான்...
யன்னல் வழிவந்த காற்றில்
என்னை நோக்கி(ச்)
சிதறிக்கிடந்த உன் கூந்தலின்
ஒரு முடியை நான் எடுப்பதற்காய்
உனக்குத் தெரியாமல்
மூன்று மணிநேரம் முயன்று
முடியாமல் தோற்றுப்போனதை
இப்போது நினைத்தாலும் இனிக்கிறது....

By சேகர் ராஜதுரை

நுளம்பு கடித்தாலும் - அதை
துரத்திவிடுமளவிற்கு
இளகிய மனசு எனக்கு...

என் ஈரமான கண்ணீர்,

ஆழமான காதல்
இவையிரண்டிலும் கரையாத
கல்மனசு உனக்கு

நீ எப்படியிருந்தாலும்

உன்னைத்தான் பிடிக்கிறது எனக்கு
உனக்கும் என்னைப் பிடிக்கவேண்டும்
நான் என்ன செய்ய அதற்க்கு....???

By சேகர் ராஜதுரை

வைரமுத்து எழுதி
A.R ரஹ்மான் இசையமைத்து
ஹரிஹரன் பாடிய
இதமான காதல் பாடல் நீ....

இரைச்சல் இல்லா இரவில்

அதைக் கேட்டுக் கிறங்கும்
இசை ரசிகன் நான்....

By சேகர் ராஜதுரை
கடற்குதிரைகளில்  மட்டும்
ஆணினம் கருத்தரிக்குமாம்...
இந்தக் காதலில்
நானும் ஒரு கடற்குதிரைதான்
நீ சுமக்க மறுத்த
என் காதலை...
நான் மட்டும் சுமப்பதால்...
By சேகர் ராஜதுரை
வானத்தில் உள்ள
நட்சத்திரங்கள் எல்லாம்
நிலவுகளாய்தான் இருந்தன....

அந்த வெண்ணிலவால்
அவைகளின் காதல்
நிராகரிக்கப் படுவதற்கு முன்னர்....

இப்போது
தேய்ந்து போயின
உன்னால் நான் ஆனதுபோல்....

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்